செவ்வாய், 22 செப்டம்பர், 2015

காணக் கிடைக்காத மோடியின் மினிமம் அரசு கொள்கை

மோடி அரசு அமைந்த பிறகு தனது அரசின் முக்கிய கொள்கையை வெளியிட்டார்.


அதனை ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் Minimum Government, Maximum Governance. அதாவது குறைந்த அரசு நடவடிக்கை, அதிகபட்ச நிர்வாகம் என்பது தான் அர்த்தம்.



பல வளர்ந்த நாடுகளில் இந்த முறை தான் உள்ளது. அதாவது அரசின் நடவடிக்கைகள் என்பது தனிமனித வியாபரம் மற்றும் சுதந்திரத்தில் தலையிடுவதில்லை.

உதாரணத்திற்கு வியாபர நோக்கில் உப்பு, சிமெண்ட் விற்பது அரசின் கடமை அல்ல. ஆனால் சாலை போடுதல், குளம் தூர்வார்தல் போன்றவை அரசின் கடமைகள். தமிழ்நாட்டில் இதற்கு நேர்மாறாக நடந்து வருகிறது.

தமிழ்நாட்டு அரசுக்கு என்று கொள்கை எதுவும் கடந்த இருபது ஆண்டுகளாக இல்லாததால் விட்டு விடுவோம்.

ஆனால் மினிமம் அரசு கொள்கையை பெரிதாக சொல்லி வந்த மோடியின் அரசு வெறும் பொருளாதரத்திற்கு மட்டுமே அந்த கொள்கையைப் பார்க்கிறது.

தனிமனித நிர்வாகம் என்று பார்த்தால் நேர்மாறாக எதுக்கெடுத்தாலும் தலையீடு அதிகமாக இருக்கிறது.

பள்ளிகள், அரசு அலுவலகங்கள் என்று ஆரம்பித்தது இப்பொழுது இதை தான் சாப்பிட வேண்டும் என்ற அளவிற்கு வந்து விட்டது. இனி இதை தான் உடுக்க வேண்டும் என்று சொல்லுவார்கள் போல.

அரசு ஊழியர்கள் இந்தியில் தான் கையெழுத்து போட வேண்டும்,

கிறிஸ்துமஸ் தினத்தன்று பள்ளிக்கு வர வேண்டும் என்று மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்தார்கள்.

யாரென்றே நமக்கு தெரியாத வட இந்திய ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பற்றி மாணவர்கள் கட்டுரை எழுத வேண்டும் என்று சொன்னார்கள்.

தற்போது ஒரு சமயத்தின் பண்டிகை நாட்களில் ஏழு, எட்டு நாட்கள் இறைச்சி விற்க கூடாது என்று சட்டமே போடுகிறார்கள்.

மாட்டு இறைச்சி சாப்பிடக்கூடாது என்பது இந்துக்கள் புனித பழக்கம். அதனை சுயக்கட்டுப்பாட்டுடன் அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர சட்டம் போட்டுக் கட்டுப்படுத்த முயலக் கூடாது.

மற்ற சமயத்தினர் உணவு பழக்க வழக்கங்களில் தலையீடு செய்வதற்கு அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

ஐஐடியில் நான்-வெஜ் சாப்பாடு சாப்பிடுவது கூட அரசின் கொள்கைகளில் ஒன்றாக இருக்கிறது என்றால் மினிமம் அரசு எங்கே இருக்கிறது?

நேற்று வந்த ஒரு செய்தி அதிலும் புதிதானது.

நமக்கு வந்த வாட்ஸ்ஆப் சாட் தகவல்களை நாம் டெலீட் செய்து விட்டால் அதுவும் சட்ட முறைகேடு என்பதாகும்.

வாட்ஸ்ஆப் தகவல்களை இடையில் இருந்து டீகோட் செய்ய முடியாததால் 90 நாட்கள் நாம் அப்படியே வைத்து இருக்க வெண்டுமாம். இதற்கு பலத்த எதிர்ப்பு வந்த பிறகு வாபஸ் பெற்றுக் கொண்டார்கள்.

ஒரு சட்டமோ, விதி முறையோ கொண்டு வரும் போது எந்த அளவு நடைமுறைக்கு ஒத்து போகும் என்பதை சிந்திக்கும் திறமை நமது அரசுக்கு இல்லையோ என்பதை தான் இது காட்டுகிறது.

அரசு என்றால் பொது வெளியிலோ, மற்றவர்களுக்கோ பாதிப்பு ஏற்படுத்தினால் கட்டுப்படுத்த வேண்டும். கமல்ஹாசன் சொன்னது போல் பாத் ரூம் ஓட்டையில் நின்று என்ன செய்கிறார்கள் என்று பார்க்க கூடாது.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக