திங்கள், 7 செப்டம்பர், 2015

மதுரை கிச்சனும், கம்மங் கூழும் - புதிய முயற்சி

இந்தக் கட்டுரை டெல்லியில் ஸ்பானிஷ் உள்கட்டமைப்பு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் திரு.பிரபு அவர்களால் எழுதப்பட்டுள்ளது. மிகவும் விரிவான கட்டுரைக்கு மிக்க நன்றி!

சினிமாவில் விக்ரமன் படத்தில் வருவது போல வித்தியாசமான முயற்சி செய்து வெற்றி பெற்ற மதுரை கிச்சன் தம்பதியினர்...சென்னைவாசிகள் ட்ரை பண்ணுங்க...



வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்களின் மாத்தி யோசி அனுபவம் (#‎மாத்தி_யோசி)

சென்னை புரசைவாக்கம் அபிராமி மால் ஃபுட் கோர்ட்டில் ‪#‎மதுரைகிச்சன் என்ற புதிய கடை ஆரம்பித்துள்ளார் என் மனைவி. 

கடந்த மாதமே திறப்புவிழா என்ற போதிலும் இது பற்றி எழுத ஒரு மாதம் எடுத்துக் கொண்டதற்கு காரணம் இருக்கிறது. மக்களின் வரவேற்பை பொறுத்து எழுதக் காத்திருந்தேன்


ஏனெனில் உணவு வகைகளுக்கு சாப்பிடுபவர் திருப்தி தான் மிகப் பெரிய விளம்பரம்.. இரண்டாவது பர்கர், பீட்சா, தந்தூரி, சாக்லெட் பவுன்டன் போன்ற நவ நாகரீக ஜங்ஃபுட் உணவுக்கடைகளுக்கு நடுவே... நாங்கள் பருத்திப்பால், பணியாரம்,புட்டு, ஆப்பம், சூப் என்று விற்க வேண்டும் அதை மக்கள் விரும்ப வேண்டும்.. 

ஆரோக்கியமான உணவு தான் என்றாலும் கோட் சூட் போட்ட கனவான்களுக்கு நடுவில் வேட்டி கட்டியவர் நின்றது போல நாங்கள். ஆனாலும் இந்த வேட்டி வெற்றி பெற்றிருக்கிறது.

ஆரம்பித்த முதல் மூன்று நாட்களில் எங்கள் கடையை அலட்சிய பார்வை வீசி கடந்து சென்றார்கள் இன்றைய நாகரீகர்கள்..

வியாபாரமே இல்லை.. கொண்டு போனதெல்லாம் அப்படியே திரும்பியது.. முதல் 3 நாட்களின் மொத்த வியாபாரம் 200 ரூபாயைக் கூட தாண்டவில்லை. நானும் சோர்ந்து போக என் மனைவி மட்டும் தைரியமாக இருந்தார்.. கொஞ்சம் இருங்க மாத்தி யோசிப்போம் என்றவர் தன் யோசனையை சொன்னார்..

பணியாரம் என்பது டிரடிஷன். அதை இந்த காலத்தவர் ஏற்கும் படி மாற்றலாம் என்றார் எப்படி என்றேன்.. சொன்னார்.. வெறும் பணியாரமாக இன்றி ட்டூட்டி ஃபுரூட்டி பணியாரம், டேட்ஸ் திராட்சை பணியாரம், சாக்லேட் பணியாரம், ஹார்லிக்ஸ் பணியாரம், பூஸ்ட் பணியாரம் என ஐடியா தந்தார். பரபரப்பாக செயலில் இறங்கினோம்.. டெஸ்ட் செய்து பார்த்தோம்

எல்லாம் பிரமாதமான சுவையில் வந்தது.

ஐந்தாவது நாள் களத்திலிறங்க கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் கடையை மொய்க்க ஆரம்பித்தார்கள்.. பிறகு எக் பணியாரம், பெப்பர் இட்லி, மினி இட்லி என விரிவு படுத்தினோம்.. 15 நாட்களில் வியாபாரம் சூடு பிடித்தது.. 16 வது நாள் மால் முதலாளி அழைத்தார்.. சிறிது பயத்துடன் போய் நின்றோம்..

அடுத்த வாரம் மாலில் ஒரு பிசினஸ் மீட்டிங் 200 பேரு வருவாங்க. நீங்க தான் ஸ்நாக்ஸ் தரப்போறிங்க என 200 பேருக்கு ஆர்டர் தந்தார்.. அதற்கு அடுத்த வாரமே அவரது வீட்டு விசேஷத்திற்கு 100 பேருக்கு ஆர்டர் தந்தார். 

நேற்று கூப்பிட்டு இன்னும் பல புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்துங்க எனக் கூறி பெரிய கடை வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க எனக் கூறியிருக்கிறார்.

இதெல்லாம் வெறும் 25 நாட்களில்... சோர்வு இல்லாமல் தோல்வியை எதிர்கொண்ட என் மனைவிக்கே இப்பெருமை எல்லாம் போய்ச் சேரும்.

அபிராமி மால் 7 ஸ்டார் தியேட்டர் வாசலில் எங்கள் கடை மதுரை கிச்சன்.. முடிந்தால் ஒரு நடை வந்து சாப்பிட்டு கருத்தை சொல்லுங்க.. மகிழ்வோம். சாப்பிட்டதற்கு நீங்க பில் பே பண்ணா ரொம்ப ரொம்ப மகிழ்வோம். உங்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்.

- வெங்கடேஷ் ஆறுமுகம்





இனி என்னுடைய அனுபவம்

இதை படிக்கும் பொது... சொந்த அனுபவம் ஒன்றை பகிரலாம்னு நினைக்கிறேன்... என்னோட அப்பா கூலி வேலை செய்ய முடியாம வேலையை விட்டுட்டு அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சு சின்ன கூழ் கடை போடலாம்னு சொன்னார்...

நானெல்லாம் சின்ன பையனா இருந்ததால் கொஞ்சம் சிரிப்பாவும் கொஞ்சம் அவமானமாவும் இருந்திச்சு... இந்த காலத்தில் யாரு கூழ் எல்லாம் குடிப்பாங்கன்னு ...நம்ம நண்பர்கள் நம்மள பத்தி என்ன நினைப்பார்கள்ன்னு ... என்னோட அப்பாவும் விடல..ஆரம்பிச்சிட்டார்....

கூழ் விற்க முடிவு செய்த போது எனக்கும் இந்த நினைப்பு தான் "கோட் சூட் போட்ட கனவான்களுக்கு நடுவில் வேட்டி" கூழ் னா என்னன்னே தெரியாதவங்க எப்படி எடுத்துக்குவாங்களோன்னு...

முதல் நாள் நான் தான் கடைல உட்கார்ந்திருந்தேன் கொஞ்சம் தயக்கத்தோடு, காலைல சில பேர் என்னது கூழான்னு கொஞ்சம் தயக்கம் கலந்த வெறுப்புடன் பார்த்திட்டு போனாங்க...

ஆனாலும் சில பேருக்கு கொஞ்சம் ஆர்வமா கம்மங் கூழ் குடிச்சதே இல்லன்னு ருசி பார்க்க குடிச்சாங்க .. அவங்களுக்கு ரொம்ப புடிச்சுபோச்சு...முதல் நாளில் 200 ரூபா வருமானம்... அட்டகாசமான லாபம் 20 ரூபா முதலிட்டில் 180 ரூபா லாபம் ...இதுவே ஒரே வாரத்தில் 400 ரூபா வருமானம் கிடைத்தது.... 15 வருடத்திற்கு முன்பு 400 ரூபா நல்ல வருமானம் ...

ஒரு வழியா நானும் ட்ரை பண்ணலாம்னு குடிச்சுபார்த்தேன்..ஆச்சர்யமா எனக்கும் ரொம்ப புடிச்சுது. அதுவும் கூழ் உடன் கருவாடு, மாங்க, வத்தல், ஊறுகாய், அப்பளம் கூட்டணி செமையா இருந்திச்சு..

என்னோட அப்பாக்கிட்ட கேட்டேன். எப்படி இந்த கூழ் ஐடியாவ பிடிச்சிங்கன்னு?... அவர் சொன்னார்.

ஒரு மாசம் முன்னாடி கலைஞர் திருப்பூர் மாநாட்டுக்கு போன போது செம பசி, சாப்பிட போனா கூட்டம் சாப்பாட்டு கடையை காட்டிலும் கூழ் கடையில் தான் அதிகம்...விலையும் ஒரு கிளாஸ் ரெண்டு ரூபா தான் பசியும் முழுசா அடங்கிருதுன்னு...அப்பவே யோசிச்சிருக்கார் மதுரைல ஆரம்பிக்கணும்னு...

சில தனிப்பட்ட காரணத்தால் ஒரே மாசத்தில் கடைய அப்பா நிறுத்திட்டார்.. எங்க கடையில் தினமும் கூழ் குடிக்க வந்தவர் நடத்த ஆரம்பிச்சார்... இப்ப பதினஞ்சு வருஷம் முடிஞ்சிருச்சு. இன்னும் அந்த இடத்தில் இரண்டு கூழ் கடை இருக்கு, மதுரைல ஏகப்பட்ட இடத்தில் கூழ் கடை பார்க்க முடிகிறது...இந்த கடை எல்லாம் பார்க்கும் போது நானா பெருமை பட்டுக்கொள்வேன் மதுரைக்கு கூழ் கடை தொடங்கியது நாமன்னு..

இப்ப எல்லாம் கூழ் செம்பில் குடுக்க ஆரம்பிச்சிடாங்க பத்து ரூபா...நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பார்க்க தான் கூழ் பிசினஸ்ன்னு தோணும். ஆனால் செமத்தியான லாபம் இதில் இருக்கு...

என்னோட அப்பா கிட்ட கத்துக்கிட்ட #‎மாத்தி_யோசி, தனிப்பட்ட முறையில் பல தடவை அப்ளை பண்ணிருக்கிறேன்...பெரும்பாலும் வெற்றி தான்...ஏற்கனவே சொன்ன மாதிரி இதில் முயற்சிக்கும் போது மற்றவர்கள் பற்றிய தயக்கம் கூடாது. பொறுமை அவசியம்...

#‎மாத்தி_யோசி

கட்டுரை ஆசிரியர் திரு.பிரபு 


ஆசிரியர் பற்றிய குறிப்பு:

திரு.பிரபு,
மதுரையை பூர்வீகமாகக் கொண்டு டெல்லியில் ஸ்பானிஷ் உள்கட்டமைப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக