வெள்ளி, 18 செப்டம்பர், 2015

வரலாற்றில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வாறு குறைக்கப்பட்டது?

தற்போது சீனா நாணய மதிப்பு செயற்கையாக குறைக்கப்பட்டது பரவலாக பேசப்பட்டு வருகிறது.


ஆனால் இந்த செயற்கையான குறைப்பு என்பது முன்பு இந்திய ரூபாய்க்கும் பின்பற்றப்பட்டு வந்தது தான்.

ஆரம்ப காலத்தில் இந்திய ரூபாய் மதிப்பும் சந்தை நிலவரத்திற்கேற்ப தினசரி மாற்றப்பட்டு வந்ததல்ல. சீரான இடைவெளியில் அரசு தான் நாணய மதிப்பை நிர்ணயித்து வந்தது.



நமது பொருளாதாரம் கடினமாக இருந்த காலக்கட்டங்களில் பணவீக்கம் பாதாளத்திற்கு செல்லும். அப்படி செல்லும் போது உள்நாட்டில் பொருட்களின் விலை கூடும்.

நிலையான நாணய மதிப்பில் நிர்ணயித்துக் கொண்டிருந்த அந்த சூழ்நிலையில் டாலர் விலையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் நமது ஊரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மதிப்பை விட குறைவாக இருக்கும்.

அந்த பொருட்களை நோக்கி மக்கள் சென்றால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தேவை குறைந்து நமது தொழிற்சாலைகள் நலிவடைந்து விடும்.

உதாரணத்திற்கு 60 ரூபாய்க்கு உள்நாட்டில் விற்ற ஒரு பொருள் 70 ரூபாய் ஏற்றம் அடைந்து இருக்கும். ஆனால் அதே பொருளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் போது முன்பிருந்த டாலர் மதிப்பில் மாற்றம் ஏற்பட்டு இருக்காது.  அதனால் வெளிநாட்டுக்காரர்கள் அதே பொருளை 60 ரூபாய்க்கு விற்க முடியும்.

(இங்கு ஒரு டாலர் என்பதை 60 ரூபாய் மதிப்பிற்கு எடுத்துக் கொள்வோம்)

செயற்கையாக நாணய மதிப்பை வைக்கும் போது ரூபாயின் மதிப்பைக் கூட்டி வைத்தால் என்ன என்று தோன்றும்? ஆனால் ஜிடிபி, நாட்டு பொருளாதாரம் போன்றவற்றுடன் நாணயமும் ஒன்றி இருப்பதால் நமது இஷ்டத்திற்கு எதுவும் செய்ய முடியாது.

பொருளாதார இயற்கையின் இந்த விளையாட்டு தான் இன்றும் உலக அளவில் ஓரளவு நாணய சமநிலையைக் காத்து வருகிறது.

பொதுவாக கம்யூனிச  நாடுகள் எல்லாவற்றையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக செயற்கை நாணய மதிப்பை பின்பற்றி வந்தன.

ஆரம்ப கட்டங்களில்  கம்யூனிச கொள்கையை பின்பற்றி வந்த இந்தியாவும் ஒவ்வொரு காலக்க்கட்டதில் செயற்கையாக நாணய மதிப்பை குறைத்து வந்தது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 19 ஆண்டுகள் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பை 4.75 என்று தான் அரசு வைத்து இருந்தது.

ஆனால் 1966ல் பட்ஜெட் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. அந்நிய செலாவணி கையிருப்பும் கணிசமாக குறைந்தது. அது பணவீக்கதிலும் கை வைக்க இந்திய அரசு ரூபாய் மதிப்பை ஒரே இரவில் 55% குறைத்தது.

அதாவது டாலர் மதிப்பு 4.75 ரூபாய் என்பதில் இருந்து 7.5 ரூபாய் என்பதாக மாற்றப்பட்டது.

அதன் பிறகு வருடத்திற்கு வருடம் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டாலும் 1980களில் மீண்டும் ஒரு பொருளாதார சிக்கல் ஏற்பட்டது.

1980களில் இரான் இராக் நாடுகளிடையே ஏற்பட்ட போரால் வளைகுடா பகுதியில் கடுமையான பதற்றம் ஏற்பட்டது. இது கச்சா எண்ணெய் உற்பத்தியை பாதிக்க எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து சென்றது.

அந்த நேரத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சரிவில் தங்க விலையும் உயர்ந்தது.

ஆனால் இந்திய அரசுக்கு தங்கமும், கச்சா எண்ணையும் தான் பெருமளவு இறக்குமதி செலவு பிடிப்பவை. இவற்றின் விலை அதிகமாகிய போது அதை சார்ந்த பொருட்கள் விலையும் அதிகமாகி பணவீக்கத்தைக் கூட்டியது.

இதனை சமாளிக்கும் விதமாக 1980 முதல் 1990 வரையான காலக்கட்டத்தில் ரூபாய் மதிப்பு 17 ரூபாய்க்கு சென்றது. ஆனால் இந்த முறை ஒரே தடவையில் குறைக்காமல் ஒவ்வொரு வருடமும் அரசு நாணய மதிப்பை மாற்றிக் கொண்டிருந்தது,

அடுத்து முக்கிய மாற்றம் 1991ல் வந்தது.

அப்பொழுது நமது நிலைமை மிகவும் பரிதாபத்தில் இருந்தது. நம்மிடம் இருக்கும் தங்கத்தை விமானத்தில் கொண்டு சென்று ஐரோப்பாவில் அடகு வைக்கும் நிலைக்கு தான் சென்று இருந்தோம்.

அந்த சமயத்தில் நரசிம்மராவ் ஜெயித்து மன்மோகன் சிங்கை வைத்து பொருளாதார சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார்.

அதன் ஒரு பகுதியாக மன்மோகன் சிங் ரூபாயின் மதிப்பை 18% குறைத்தார். அதனால் டாலர் மதிப்பு 17 ரூபாய் என்பதிலிருந்து 22 ரூபாய்க்கு சென்றது. இதுவும் ஒரே இரவில் தான் நடந்தது.



அந்த சமயத்தில் மன்மோகன் சிங் வெளிநாட்டு பல்கலைகழகங்களிடம் பேராசிரியராக டாலரில் வருமானத்தை பெற்று இருந்தார். ரூபாய் மதிப்பைக் குறைத்தது தமக்கு சாதகமாகி விடக்கூடாது என்று நினைத்தார். அதற்காக ரூபாய் மதிப்பு குறைவால் தமக்கு கிடைத்த லாபத்தை பொது நல நிதிக்கு தந்து விட்டார்.

விளம்பரம் இல்லாமல் அவர் செய்த செயல் உண்மையிலே மிகப்பெரியது தான்.

அதே சமயத்தில் பொருளாதார சீர்த்திருத்தத்தில் முக்கிய பகுதியாக இனி நாணய மாற்று விகிதங்கள் சந்தையில் இருக்கும் தேவையை வைத்து தினசரி நிர்ணயிக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த முறை தான் நாம் தற்போது பின்பற்றி வருவது.

அடுத்து நடந்தது தான் நமக்கு தெரியும். 2010களில் நமது நிதி நிலைமை மிக மோசமடைந்து அறுபதை தாண்ட செய்தது.

ஆனால் டாலர் வலுவாக செல்வதால் இன்னும் கொஞ்ச காலம் அறுபதை நாம் கீழ் கொண்டு வர முடியாது என்பது தான் தற்போதைய நிலைமை.

மொத்தத்தில் நாணய மாற்று விகிதங்கள் சந்தையின் போக்கில் இருப்பது திடீர் ஹார்ட் அட்டேக் வருவதை தடுக்க பெரிதும் உதவும்.

தொடர்பான கட்டுரைகள்:
அமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது?

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக