வியாழன், 17 செப்டம்பர், 2015

தங்கத்திற்கு வட்டி தரும் அரசு திட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி?

கொள்கை அளவில் தயாராக இருந்த தங்கத்திற்கு வட்டி தரும் அரசு திட்டத்தைப் பற்றி ஏற்கனவே விவரித்து இருந்தோம்.

பார்க்க:  தங்கத்தை வீட்டிற்கு பதில் வங்கியில் வைத்தால் வட்டி கிடைக்கும்


அந்த திட்டம் தற்போது அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வட்டி எவ்வளவு கொடுக்கலாம்? என்பது போன்ற விடயங்களை தீர்மானிக்க ஆர்பிஐ பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது.



சும்மா தூங்கி கொண்டிருக்கும் தங்கத்தை பணப்புழக்கத்திற்கு கொண்டு வரும் பொருட்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இதில் இரண்டு முறைகளில் நாம் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம்.
  1. ஒன்று உருக்கிய தங்கமாக
  2. இரண்டாவது தங்கத்தின் மதிப்புடன் தொடர்புடைய கடன் பத்திரங்களாக..
இரண்டையும் கொஞ்சம் விவரமாக பார்ப்போம்.

GOLD MONETISATION SCHEME:


இந்த முறையில் தங்கத்தை உருவ வடிவில் உருக்கிய பிறகு வங்கியிடம் கொடுத்து வைத்து அதற்கு வட்டியைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதன் வைப்புக் காலம் முடிந்த பிறகு மீண்டும் தங்கமாக பெற்றுக் கொள்ளலாம்.

நமது தங்க நகைகளை அப்படியே கொடுத்து மீண்டும் பெற்றுக் கொள்ள முடியாது.

முதலில் அருகிலுள்ள ஹால்மார்க் அலுவலகத்தில் வைத்து தங்கத்திற்கான தர சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு சான்றிதழை பெற்ற பிறகு வங்கியில் சென்று Gold Savings Deposit என்ற கணக்கை திறந்து கொள்ள வேண்டும். அதில் தங்கத்தை தர சான்றிதழுடன் கொடுத்து குறிப்பிட்ட வருடத்திற்கு வைப்பு நிதி வைத்துக் கொள்ளலாம்.

நகைகளிடம் இருக்கும் தங்கம் பொற்கொல்லரை வைத்து உருக்கப்படும். நமது கண் முன்னரே உருக்கி அதற்கான சான்றிதழை தருவார்கள்.

500 கிராம் தங்கத்தை உருக்குவதற்கு 500 ரூபாய் அளவு கட்டணம் வசூலிக்கப்படும். தங்கத்தை வங்கியில் வைப்பு செய்வதாக இருந்தால் இந்த கட்டணத்தை வங்கியே செலுத்தி விடும்.

அதற்கு வருடந்தோறும் வட்டி தருவார்கள். இந்த வட்டி மூன்று சதவீத அளவு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இன்னும் சரியாக தெரியவில்லை.

இந்த வட்டியை மீண்டும் தங்கமாகவும் பெற்றுக் கொள்ளலாம். அன்றைய தங்க விலை மதிப்பின் படி பணமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு 100 கிராம் தங்கத்தைக் கொடுத்து ஒரு வருடம் கழித்து 103 கிராம் தங்கமாக பெற்றுக் கொள்ளலாம். அல்லது 103 கிராம் தங்கத்தின் அன்றைய பண மதிப்பை பெற்றுக் கொள்ளலாம்.

SOVEREIGN GOLD BOND SCHEME


இந்த இரண்டாவது முறையில் தங்கத்தை உருவ வடிவில் கொடுத்து வைக்க தேவையில்லை. உருக்க வேண்டிய தேவையும் இல்லை.

நம்மிடம் இருக்கும் பணத்தை வைத்து கொண்டு அன்றைய தங்க மதிப்பில் பத்திரங்களாக வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு 5, 10, 50, 100 கிராம் தங்க மதிப்புகளில் பத்திரங்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

இதற்கும் முந்தைய முறையைப் போல் வருடத்திற்கு மூன்று சதவீத அளவு வட்டி தருவார்கள்.

வைப்புக் காலம் முடிந்த பிறகு மீண்டும் அன்றைய தங்க மதிப்பில் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது தங்கமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

அதிக பட்சமாக ஒரு வருடத்திற்கு 500 கிராம் அளவு தான் இந்த பத்திரங்களை வாங்க முடியும்.

இந்த பத்திரங்கள் சந்தையில் தற்போதுள்ள Gold ETF பத்திரங்கள் போல் தெரியும்.

ஆனால் Gold ETF பத்திரங்களில் வட்டி எதுவும் வழங்கப்படுவதில்லை. அரசின் இந்த பத்திரங்களில் வட்டி வழங்கப்படும்.

இந்த பத்திரங்களை குறைந்தது ஐந்து வருடம் வைப்பாக வைத்து இருக்க வேண்டியது அவசியம் என்று தெரிகிறது.

***

இந்த இரண்டு திட்டங்களுமே எதிர்காலத்தில் பெருமளவில் பயனளிக்கும் என்று நம்பலாம்.

வீட்டில் சும்மா வைத்து திருட்டு பயத்திற்காக பயந்து இருக்க வேண்டிய தேவையில்லை.

லாக்கரில் பணம் கொடுத்து வைக்க வேண்டிய தேவையில்லை. அதே நேரத்தில் நாம் கொடுக்கும் தங்கத்திற்கு நமக்கு பணம் தருவார்கள்.

வட்டி விகிதம் குறைவு போல் தோன்றினாலும் எதிர்காலத்தில் தங்க விலையில் உயர்வு ஏற்படும் போது நமது முதலீடும் அதே அளவில் பெருகியிருக்கும்.

இதனால் வருங்காலங்களில் தேவையில்லாமல் நகைகளை வாங்கி செய்கூலி, சேதாரம் கொடுப்பதற்கு பதில் இப்படி தங்கத்தை சேமித்துக் கொள்ளலாம்.

அதன் பிறகு தேவைப்படும் சமயத்தில் மட்டும் இந்த வைப்பு தங்கம் மூலம் கிடைத்த வருமானத்தை பயன்படுத்தி புதிய டிசைன் நகைகள் வாங்கிக் கொள்ளலாம்.

தங்கத்தை முதலீடாக கருதுபவர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம்.

தொடர்புடைய கட்டுரைகள்:

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக