திங்கள், 21 செப்டம்பர், 2015

மதர்சன் சுமி பங்கை மறு பரிசீலனை செய்யும் நேரம்

கடந்த காலாண்டு வரை 62% அதிக லாபம் கொடுத்து மிக நல்ல முறையில் செயல்பட்டு வந்த ஒரு நிறுவனம் மதர்சன் சுமி.


Motherson Sumi Systems நிறுவனமானது பிரபலமான மாருதி, வோல்ஸ்வேகன், டாடா, மஹிந்திரா, ஆடி நிறுவனங்களுக்கு கார் உதிரி பாகங்களை தயாரித்து வருகிறது.

அடிப்படையில் ஒரு நல்ல நிறுவனம். நல்ல வளர்ச்சியும் எதிர்பார்க்கப்பட்ட நிறுவனம்.

ஆனால் திடீர் என்று சூழ்நிலைகள் அவர்களுக்கு சாதகமில்லாமல் மாறி விட்டது.



வோல்ஸ்வேகன் காரைப் பற்றி கேள்விபட்டிருப்போம்.

ஜேர்மன் கார் நிறுவனமான வோல்ஸ்வேகன் தரத்திற்கு மிகவும் பிரபலமானது. ஆனால் அவர்கள் செய்த ஒரு நாணயமற்ற நடவடிக்கை மதர்சன் சுமிக்கும் பாதகமாக அமைந்து விட்டது.

அமெரிக்காவில் வோல்ஸ்வேகன் காருக்கும் புகை வெளியீடு தரம் பார்க்கும் எமிசன் டெஸ்டின் போது மென்பொருளை பயன்படுத்தி அளவீடுகளை செயற்கையாக குறைத்து விட்டனர் என்பது தான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு.

அதாவது டெஸ்டின் போது குறைவான புகை அளவீடு காட்டியுள்ளது. அதே நேரத்தில் சாலையில் அதிக அளவு புகை வெளிவந்துள்ளது.

தற்போது வோல்ஸ்வேகன் நிறுவனத்தாரே இதனை ஒப்புக் கொண்டுள்ளதால் குற்றச்சாட்டும் உண்மையாகிறது.

இதனால் 18 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்பட உள்ளது.  அதே நேரத்தில் நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறைவதால் வோல்ஸ்வேகன் கார் விற்பனையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அடுத்து கொரியா போன்ற நாடுகளும் வோல்ஸ்வேகன் கார்கள் மீது தர பரிசோதனை மேற்கொள்ள இருக்கின்றன.

இதனால் வோல்ஸ்வேகன் பங்கு சர்வதேச சந்தையில் 20% அளவிற்கு குறைந்து விட்டது.

அதே நேரத்தில் கார் உதிரி பாகங்களை தயாரிக்கும் மதர்சன் சுமி 44% வருமானத்தை வோல்ஸ்வேகன் மூலம் பெறுகிறது என்பது குறிப்பிட்டத்தக்கது. இதனால் இவர்களது நிதி அறிக்கையிலும் இந்த பிரச்சினை எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

அடுத்து மாருதியின் 85% உதிரி பாகங்களை மதர்சன் சுமி தயாரித்துக் கொடுத்து வருகிறது.

ஆனால் மாருதி நிர்வாகம் ஒரே நிறுவனத்தை அதிக அளவு சார்ந்து இருக்கக் கூடாது என்று ஒரு முடிவை எடுத்துள்ளது. அதன்படி, எந்த துறையிலும் 70%க்கும் மேல் ஒரே நிறுவனத்தை சார்ந்து இருக்க கூடாது என்று விதியமைத்து உள்ளது.

இந்த முடிவு நேராக மதர்சன் சுமி நிறுவனத்தையும் பாதிக்கும் என்பதால் இந்த நிறுவனத்திற்கு பாதகமான நிலை இரண்டு முனைகளில் இருந்து வந்துள்ளது.

சாதகமில்லாத சூழ்நிலை மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த பங்கில் இருந்து வெளியேறுவது பாதுகாப்பானது.

பங்கு ஏற்கனவே அதிக அளவு சரிந்து விட்டதால் 270க்கு அருகில் வரும் போது பாதி முதலீடையும், அடுத்த நிதி அறிக்கை வெளிவரும் போது மீதி பங்கையும் விற்று வெளியேறுவது நல்லது.

தொடர்புடைய கட்டுரைகள் :
ஆம்டேக் ஆட்டோவை விற்க வேண்டிய தருணம்

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக