செவ்வாய், 19 மே, 2015

மெதுவான வேகத்தில் மீளும் சந்தை

கடந்த மே 16 அன்று சொல்லியவாறு போர்ட்போலியோவை பகிர்ந்து இருந்தோம்.

ஒரு வகையில் போர்ட்போலியோ பகிர்ந்த நேரம் அதிர்ஷ்டத்தால் நல்ல நேரமாக அமைந்து இருந்தது.




26,500 என்ற நிலைக்கு சென்ற சந்தை தற்போது 28,000 புள்ளிகளை நோக்கி மீண்டு வந்து கொண்டுள்ளது.

தற்போது சந்தையில் ஏற்படும் உயர்வுகளுக்கு பெரிதாக காரணம் சொல்ல முடியாது. அதிக அளவில் கீழே வந்த சந்தை மீண்டும் சரியான நிலைக்கு திரும்புவதாக கருதிக் கொள்ளலாம்.

இனி சரியான நிலை என்பது 28,000 மற்றும் 29,000 என்ற புள்ளிகளுக்கு இடைப்பட்டதாக இருக்கலாம்.

ஆனாலும் இன்னும் சில ஏற்ற இறக்கங்களுடேனே சந்தை செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் இன்னும் வாங்கும் வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.

தற்போதைக்கு இந்திய சந்தையானது மதிப்பீடல் முறையில் P/E மதிப்புகள் 16 என்ற அளவில் வருகிறது. இது மற்ற வளரும் நாடுகளை விட நன்றாகவே உள்ளது.

அதே போல் இந்திய GDP வளர்ச்சியும் இந்த வருடம் சீனாவின் வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாக இருக்கும் என்றே தெரிகிறது.

நீண்ட கால நோக்கில் முதலீடு செய்பவர்கள் கடந்த காலத்தையும் மூன்று மாதங்கள் என்று எடுப்பதற்கு பதிலாக ஒரு வருடம் என்று எடுத்துக் கொண்டால் சில நல்ல விடயங்கள் நடந்து உள்ளன என்பதை அறியலாம்.

நிலையான அரசு, பல துறைகளில் சந்தை திறக்கப்பட்டுள்ளது, நிதி பற்றாக்குறை 2013யை விட 2014ல் முன்னேறியுள்ளது என்று முக்கிய சாதகமான விஷயங்கள் இருக்கவே செய்கின்றன.

அதே போல் கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம் ஒரு மிகப்பெரிய நேர்மறை காரணியாகவும் உள்ளது.

இன்னும் தொழில் துறை வளர்ச்சி என்பது மேலே வரவில்லை என்பது உண்மை தான். ஆனால் மேலே கூறிய காரணிகள் உண்மையான பயன்களை கொடுக்க வேண்டும் என்றால் ஓரிரு வருடங்கள் கட்டாயம் தேவை.

தற்போது சந்தை மீண்டு வருவது கூட எழுச்சி பெறுவதற்கான திறன் இருப்பதைக் காட்டுகிறது.

அந்த வகையில் நீண்ட கால முதலீட்டிற்கு இன்னும் பங்குச்சந்தை ஏற்றதாகவே உள்ளது.

அடுத்து வரும் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்புகள் தான் பூஸ்ட் கொடுக்க வாய்ப்பு உள்ளது. அது வரை அலை போல் இருக்கும் சந்தையில் குறைய குறைய வாங்கி போடலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக