ஞாயிறு, 26 ஜூலை, 2015

மீண்டும் சாதகமாக திரும்பும் பங்குச்சந்தை காரணிகள்

கடந்த வாரம் பங்குச்சந்தைகளில் திருத்தங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எழுதி இருந்தோம்.


திருத்தங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்னும் 500 சென்செக்ஸ் புள்ளிகளுக்கு கீழ் குறைய வாய்ப்பு உள்ளது என்றே கருதலாம்.

பார்க்க: இந்திய பங்குச்சந்தை திருத்தமடைய வாய்ப்பு

மதிப்பீடலில் இந்திய சந்தை மலிவாக இல்லை என்பதால் குறுகிய கால நோக்கில் அவ்வாறு சொல்லப்பட்டது.



ஆனால் நீண்ட கால நோக்கில் சில சாதகமான காரணிகள் தற்போது இந்திய பங்குச்சந்தைக்கு சாதகமாக திரும்பி உள்ளன.

மோடி உண்மையில் அதிர்ஷ்டக்காரர் தான். காங்கிரஸ் அரசுக்கு பெரும் தலைவலி கொடுத்து வந்த கச்சா எண்ணெய் விலை உயர்வு இவரது காலத்தில் தொடர்ந்து வீழ்ச்சியிலே இருந்து வருகிறது.

கடந்த வருடம் தான் மனிதர் தப்பி விட்டார். இனி மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயரும். அப்பொழுது என்ன செய்யப் போகிறார் என்று தான் எதிர்க்கட்சிகள் முதல் பலர் நினைத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் சிறிது உயர்ந்த கச்சா எண்ணெய் மீண்டும் நாற்பது டாலரை நோக்கி கீழே நகர ஆரம்பித்து விட்டது. ஈரான் மற்றும் அமெரிக்கர்களின் சில முடிவுகள் காரணமாக மிதமிஞ்சிய சப்ளை இன்னும் நின்ற பாடில்லை.

இது போக, தங்கம் விலையும் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்படும் விலைக்கு அருகில் வந்து விட்டது.

பார்க்க:  ஐந்து வருட குறைவு விலையில் தங்கம், வாங்கலாமா?
தங்கமும், எண்ணெயும் சேர்ந்து தான் பெருமளவில் இந்திய அந்நிய செலாவணியையும், நிதி பற்றாக்குறையையும் பதம் பார்த்து வந்துள்ளன. அவை இரண்டும் கட்டுக்குள் வந்து இருப்பதால் அரசுக்கு பெருமளவு பணம் மிச்சமாக உள்ளது.

இந்த பணம் அரசின் மூலம் அதிக அளவு செலவிடப்பட உள்ளது. கடந்த வருடம் சிக்கனமாக இருந்த மத்திய அரசு இந்த வருடம் கட்டமைப்பு, பாதுகாப்பு, மின்சாரம் போன்ற துறைகளில் பெருமளவு செலவிட முனைந்துள்ளது. இது இனியும் சிறிது காலம் தொடரலாம் என்றே தோன்றுகிறது.

இவ்வாறு செலவிடப்படும் பணம் முக்கியமாக உற்பத்தி மற்றும் கட்டமைப்பு நிறுவனங்களில் ஆர்டர் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தற்போது வெளிவந்த நிப்டி நிறுவனங்கள் முடிவுகளில் கூட விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் கடனுக்கான வட்டி கட்டுவது அதிகமானதால் லாபம் குறைந்துள்ளது.

அப்படி என்றால் இந்தக் கடன்கள் குறையும் பட்சத்தில் லாப விகிதம் கூட வாய்ப்புள்ளது. கடன்கள் மீண்டும் கட்டப்படும் சமயத்தில் வங்கிகள் வாராக்கடன்கள் கூட முன்னேற்றம் காட்ட வாய்ப்புள்ளது.

ஜூலை மாத முற்பாதியில் பருவ மழை குறைந்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் இரண்டாவது பாதியில் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதனால் ஜூலை இறுதி வரையில் உள்ள மழை பொழிவு சராசரிக்கும் ஐந்து சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.

இது பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தம் வாய்ப்புகள் குறைவு என்பதால் பணவீக்கம் மற்றும் வாங்கும் சக்தி சந்தைக்கு சாதகமாக மாறவே வாய்ப்புகள் உள்ளன.

மொத்தத்தில், நமது கட்டுப்பாட்டில் இல்லாத காரணிகள் நமக்கு சாதகமாக கூடுவது மகிழ்வான விஷயம் தான்...

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக