திங்கள், 13 ஜூலை, 2015

பகுதி நேர வேலைக்கு வருமான வரி செலுத்துவது எப்படி?

தற்போது இணைய உலகம் பிரபலமாகிய பிறகு பகுதி நேர வேலைகளும் அதிகரித்து விட்டது. அதிக அளவு வருமானம் தருமளவு பகுதி நேர வேலைகளும் மாறி விட்டது.


Freelancers, ப்ளாக் எழுதுவது என்று பல வழிகள்  மூலம் சம்பாதிப்பது என்பது இன்று மிக அதிகமாகி விட்டது. நல்ல விசயமும் கூட...

சில இந்திய ப்ளாக்கர்கள் மாதத்திற்கு ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பதாக இணையத்தில் பார்த்து இருக்கிறோம். கண்டிப்பாக நாம் அந்த பட்டியலில் இல்லை...:)



இவ்வாறு அதிகமாக வரும் வருமானத்திற்கும் கணக்கு காட்ட வேண்டும். வருமான வரியும் செலுத்த வேண்டும் என்பது ஒரு முக்கிய விதிமுறை.

தற்போது வரை யாரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது என்பதே உண்மை. ஏனென்றால் நமது வங்கி கணக்குகள் மேலை நாடுகளை போல் வருமான வரி அலுவலகத்துடன் இது வரை இணைக்கப்படவில்லை.


ஆனால் இந்த வருடம் அரசு அதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. நமது வங்கி கணக்குகள் ஒரு மிகப்பெரிய சர்வர் மூலம் வருமான வரி அலுவலகத்துடன் இணைக்கப்பட உள்ளன.

அதனால் ஒவ்வொரு வருமானத்திற்கும் கணக்கு காட்ட வேண்டிய சூழ்நிலை விரைவில் வரலாம்.

அதனால் இந்த கட்டுரை கொஞ்சம் உங்களுக்கு பயனாக இருக்கலாம்.

நீங்கள் ஒரு நிறுவனத்தில் மாத சமபளம் வாங்குபவராக இருந்தாலும் பகுதி நேர வேலை பார்ப்பதற்கு எந்த வித சட்டத்தடையும் கிடையாது. இதனால் சட்ட பிரச்சினை வந்து விடுமோ என்று பயந்து போய் ஒதுங்குவது என்பது தேவையில்லை.

வருமான வரி அலுவலகமே அதனை professional என்ற பிரிவிற்குள் தனியாக பிரித்துள்ளது. இந்த Professional என்பவர் ஒரு போட்டோகிராபர், ஓவியர், மென்பொருளாளர், எழுத்தாளர் என்று எவராகவும்  இருக்கலாம்.

அவர்கள் இவ்வாறு பகுதி நேர வேலையில் வருடத்திற்கு 1.2 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதித்து இருந்தால் கணக்கு காட்ட வேண்டும் என்பது ஒரு முக்கிய விதி முறை.

அதற்கு முதலில் உங்கள் வங்கி கணக்கில் சம்பளம் அல்லாமல் வரவு வந்த பணத்தை எல்லாம் முதலில் கணக்கிட வேண்டும்.

இதில் உங்கள் பகுதி நேர வேலைக்காக பயண செலவு, வேறு யாருக்காவது சமபளம் கொடுத்தல், இன்டர்நெட் பில், வேறு ஏதாவது தொடர்புடைய செலவுகள் இருந்தால் மேலே உள்ள வரவுகளில் இருந்து கழித்து விடலாம்.

ஆனால் இந்த செலவுகள் தொடர்பாக வருமான வரி அலுவலகத்தில் இருந்து கேள்விகள் வந்தால்  அதனை நிரூபிப்பதற்கு தயாராக ஆவணங்கள் வைத்து இருக்க வேண்டும்.

அதே போல், ப்ளாக் எழுதுவதற்கு என்று லேப்டாப் வாங்கி இருப்பீர்கள். காலப்போக்கில் அதன் மதிப்பு குறைந்து போகலாம், இதனை Depreciation Cost என்று எடுத்து கொண்டு வரியை சேமிக்கலாம்.

சில சமயங்களில் நமக்கு காசு தரும் நிறுவனங்கள் TDS என்ற முறையில் வரியை ஆரம்பத்திலே பிடித்து விடுவார்கள். அதனையும் கணக்கு காட்டி வரியை சேமிக்கலாம்.

அதற்கு 16A என்ற படிவத்தை உங்கள் கிளின்ட் நிறுவனத்திடம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் உங்கள் பகுதி நேர வேலை மூலம் 25 லட்சத்திற்கும் மேல் வருமானம் வந்தால் ஒரு ஆடிட்டரை வைத்து கணக்கு பார்த்து சான்றிதழ் வாங்க வேண்டும்.



இவ்வாறு பகுதி நேர வேலைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை பதிவு செய்வதற்கு உங்கள் வழக்கமான சம்பளம் தொடர்பான வருமான வரி படிவங்களுடன் ITR-4 என்ற புதிய படிவத்தையும் இணைக்க வேண்டும்,

பார்க்க: புதிய வருமான வரி படிவங்களை எப்படி பயன்படுத்த வேண்டும்?

எப்பொழுதும் ஒரே வித வருமானத்தை நம்பி இருக்கக் கூடாது என்று வாறன் பப்பெட் சொல்லி இருப்பார்.

அது போல், எல்லாருக்கும் சுயதொழில் என்ற ஒரு ஆர்வம் இருக்கும். அவ்வாறு நம்மிடம் இருக்கும் சுயதொழில் திறமையை பகுதி நேர வேலை வைத்து நாம் சோதித்து பார்க்கலாம். அந்த நேரத்தில் இந்த வருமான வரி படிவங்கள் பற்றிய முழு அறிவையும் தெரிந்து வைத்து இருப்பது நல்லது.

உங்கள் பகுதி நேர வேலையும் ஆடிட்டரை வைத்துக் கணக்கு பார்க்கும் அளவு வளர எமது வாழ்த்துக்கள்!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக