புதன், 15 ஜூலை, 2015

மொபைல் டவர் பரிமாற்றங்களில் ஏர்டெல், வோடபோன், ஐடியா

இந்த சந்தேகம் பல நாட்களாக இருந்ததுண்டு.

ஸ்பெக்ட்ரம் ஏலம் அடிக்கடி நடக்கிறது. சில நிறுவனங்கள் வெற்றி பெறுகின்றன. சில ஸ்பெக்ட்ரத்தை இழந்து விடுகின்றன.


அந்த சூழ்நிலையில் அங்காங்கே இருக்கும் மொபைல் டவர்களை எப்படி பயன்படுத்துவார்கள் என்று புரிந்தும் புரியாமலும் சந்தேகம் வருவதுண்டு.



இன்று ஒரு செய்தி வந்தது. அது தொடர்பாக பல தகவலகள் திட்டிய போது மேலும் பல தெளிவுகளைக் கொடுத்தது.

செய்தியின் படி, ஏர்டெல் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களிடம் இருந்து சில ஏரியாக்களின் டவர்களை வாங்க இருக்கிறது.

எப்படி வாங்குகிறார்கள் என்று பார்த்தால் ஒரு வித்தியாசமான புரிதல்..

ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா என்ற மூன்று நிறுவனங்களும் போட்டியாளர்கள் தான். ஆனால் மூவரும் இணைந்து Indus Towers என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிறுவனத்தின் வேலை என்னவென்றால், ஆங்காங்கே டவர்களை நிறுத்தி டெலிகாம் நிறுவனங்களிடம் வாடகை பெற்றுக் கொள்வது.

இப்படி இந்தியாவின் 23 டெலிகாம் வட்டங்களில் 15 வட்டங்களில் அதிக அளவு டவர்களை கையில் வைத்துள்ளார்கள்.

உங்களிடம் தகுதியான நிலம் இருந்தால் Indus Towers வெப்சைட்டில் போய் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் டவர்களை நிறுவுவார்கள். அதன் பின் ஏதேனும் டெலிகாம் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும்.

இப்படி ஒரு பொதுவான நிறுவனத்தை ஏற்படுத்துவது மூன்று நிறுவனங்களுக்குமே அதிக அளவு பணத்தை சேமிக்கும்.

இதற்கு முன்னால் மொபைல் போன்களில் கூட இயங்கு தளம் உருவாக்குவதற்கு நிறுவனங்கள் கூட்டு சேருவதை கண்டிருக்கிறோம்.

கூட்டணி என்பது அரசியலில் மட்டுமல்லாமல் வியாபாரத்திலும் நல்ல விளைவை கொடுக்கத்தான் செய்கிறது.

Indus Towers இல்லாத மீதி எட்டு வட்டங்களில் டெலிகாம் நிறுவனங்கள் தாமாகவே டவர்களை நிர்வகித்துக் கொள்கின்றன.

ஆனால் இந்த வட்டங்கள் காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் என்று பதற்றமான ஏரியாக்களாகவே உள்ளன.

தற்போதைய டீல் படி,  ஏர்டெல் வோடோபோன் நிறுவனத்திடம் 12,000 டவர்களையும், ஐடியா நிறுவனத்திடம் 9000 டவர்களையும் வாங்குகிறது.

இந்த டீல் இரண்டு தரப்புக்குமே பலன் தருவது தான்.

ஏர்டெல் புதிதாக டவர்களை உருவாக்குவதற்கு பதில் ஏற்கனவே உள்ளதை பயன்படுத்துவது என்பது பல வழிகளில் பயன் தரும்.

அதே நேரத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலத்தால் அதிக அளவு கடன் பெற்றுள்ள வோடோபோன், ஐடியா நிறுவனங்களுக்கு கடனைத் தீர்க்க இந்த பணம் உதவும்.

இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பதால் டெலிகாம் வியாபாரத்தில் நஷ்டம் என்பது அரிது தான்..

தொடர்புடைய பதிவுகள்:
ஏன் 900MHz ஸ்பெக்ட்ரத்தை நோக்கி நிறுவனங்கள் ஓடுகின்றன?

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக