வெள்ளி, 24 ஜூலை, 2015

ரிசர்வ் வங்கிக்குள் அரசியல் புகும் அபாயம்

இந்தியாவில் சில அரசு அமைப்புகளான ரிசர்வ் வங்கி, இஸ்ரோ, செபி, உச்ச நீதி மன்றம், ஐஐடி, தேர்தல் கமிசன் போன்றவற்றின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதற்கு ஒரே காரணம் அங்கு அரசியல் புகாமல் இருப்பதே.


இந்த அமைப்புகள் அனைத்தும் தன்னாட்சி பெற்றவை. அரசு நேரடியாக இவர்களை கட்டுப்படுத்த முடியாது. அவர்களுக்கென்று உள்ள நிபுணர் குழு தான் முடிவுகளை தீர்மானிக்கும்.



ஆனால் மோடி வந்த பிறகு இந்த மாதிரியான அமைப்புகளில் அரசியல் தலையீடு அதிகமாகவே உள்ளது.

ஐஐடியில் பிஜேபி கொள்கைகள் புகுத்துதல், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தலையிடல் என்று குறுக்கீடுகள் அதிகமாகவே உள்ளன.

அடுத்து ரிசர்வ் வங்கியை நோக்கி கவனத்தை திருப்பியுள்ளார்கள்.

ரிசார் வங்கியை பொறுத்தவரை ஒவ்வொரு காலான்டிற்கும் கூடி வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை தீர்மானிப்பது என்பது அவர்களது ஒரு முக்கியமான பணியாகக் கருதப்படுகிறது.

இதனை ரிசர்வ் வங்கி கவர்னரின் கீழ் உள்ள குழுவின் ஆலோசனையின் படி அவர் தீர்மானிப்பார். ஆனால் விட்டோ அதிகாரம் என்பது அவர் கையில் தான் இருக்கும்.

அதாவது அவரது முடிவே இறுதியானது.

ஆனால் கடந்த அரசு இருக்கும் போது சிதம்பரத்திற்கும், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவுக்கும் வட்டி விகிதங்கள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன.

அத்தகைய கருத்து வேறுபாடுகள் அருண் ஜெட்லிக்கும் ரகுராம் ராஜனுக்கும் தொடர்கிறது.

அதாவது அரசின் எண்ணத்திற்கேற்ப வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து வளர்ச்சியை வேகமாக்குவதில் தான் கருத்து வேறுபாடுகள் வருகின்றன..

இது போக, மோடியின் மேக் இன் இந்தியா கொள்கையும் ராஜனால் விமர்சனம் செய்யப்பட்டது.

ஆனால் ரிசார் வங்கியைப் பொறுத்த வரை வளர்ச்சி மட்டும் அவர்கள் குறிக்கோள் அல்ல. வளர்ச்சியுடன் சேர்த்து பணவீக்கம், நாணய விகிதம், அந்நிய செலாவணி என்று பல காரணிகளுடன் தான் சம நிலையில் பயணிக்க வேண்டியுள்ளது.

அதனால் தான் தரவுகளை மையமாக வைத்து மெதுவாக வட்டி விகிதங்களில் மாற்றம் செய்கிறார்கள்.

அது நல்லதும் கூட. இல்லாவிட்டால் கடனை எளிதில் வழங்கி குமிழை ஏற்படுத்தி விட்டால் பின்பு சீரமைப்பது என்பது மிகக் கடினம். அதனால் தான் இந்தியா  மற்ற நாடுகளைப் போல் பெரிய அளவில் பொருளாதார தேக்கங்களில் இது வரை சிக்கவில்லை.

ஆனால் அரசின் பார்வைக்கு கவர்ச்சிகரமான வளர்ச்சி என்பது தான் முக்கிய குறிக்கோளாக உள்ளது. அது தான் ஓட்டு அரசியலுக்கும் உதவும். ஆனால் நீண்ட காலத்தில் பார்த்தால் எங்காவது சென்று பிரச்சினையை ஏற்படுத்தி விடும்.

இந்த விதமான கருத்து வேறுபாடு காரணங்களால் மோடி அரசு ரிசர்வ் வங்கி கவர்னரின் அதிகாரத்தை குறைக்க முற்பட்டுள்ளது.

அதாவது பொருளாதார கொள்கைகள் தொடர்பாக எடுக்கும் முடிவுகளில் கவர்னரின் விட்டோ அதிகாரம் பறிக்கப்படுகிறது.

அதற்கு பதிலாக அரசு அமைக்கும் குழுவின் மெஜாரிட்டி ஓட்டுக்கள் மூலம் முடிவுகள் தீர்மானிக்கப்படும் என்று அரசு சொல்லியுள்ளது.

இந்தக் குழுவில் ரிசர்வ் வங்கியில் இருந்து தான் ஆட்களை போடுவார்களோ அல்லது வெளியே இருந்து போடுவார்களோ என்று தெரியவில்லை.

அப்படி வெளியில் இருந்து வந்தால் இந்திய கிரிக்கெட் வாரியம் போல் அரசியல் கலப்பது தவிர்க்க முடியாமல் போய் விடும்.

மாற்றம் என்ற பெயரில் தொட்டதில் எல்லாம் கை வைப்பதை விட தேவையானவற்றை மட்டும் மோடி மாற்றினால் போதும்.

நல்லா சென்று கொண்டிருக்கும் ரிசர்வ் வங்கியில் சென்று குழப்பம் ஏற்படுத்துவது தேவையில்லாத வேலை!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக